குற்றவாளிகளை சாதிய ரீதியில் வகைப்படுத்தக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு

சிறையில் சாதிய பாகுபாடு காண்பிக்கப்பட்டால் மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2024-10-03 06:50 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை அவர்களது சாதிய பின்புலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி வைத்திருப்பது, சிறைகளில் மிக மோசமான வேலைகளை செய்ய சொல்வது, பாகுபாடுடன் நடத்துவது என்பது பல்வேறு மாநிலங்களின் சிறை விதிமுறைகளிலேயே அமலில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 11 மாநில சிறைகளில் சாதிய ரீதியிலான அணுகுமுறை விதிகளை ரத்து செய்ய உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், "தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சாதிய ரீதியில் வகைப்படுத்தக்கூடாது. சாதிய ரீதியில் வகைப்படுத்திய பதிவுகள் சட்ட விரோதமானவை. அவை அழிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட மாநிலங்கள் வகுத்துள்ள சிறை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக இருக்கிறது. தற்போதைய தீர்ப்பின்படி, சிறை விதிகளில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

தண்டனை குறைப்பு, சிறைகளை சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது. எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது. அப்படி சிறையில் சாதிய பாகுபாடு காண்பிக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்