நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று மக்களவையில் பேசிய பேச்சு காரசார விவாதத்திற்கு காரணமானது.

Update: 2024-07-02 04:00 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பா.ஜனதா எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

மக்களவை விவாதம் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவராக அவர் ஆற்றிய இந்த முதல் உரையில்,

பிரதமர் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். மேலும் அக்னிபாத் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டும் மத்திய அரசை அவர் சாடினார். இதற்கு அந்தந்த துறை மந்திரிகள் குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அனல் பறந்த விவாதம் நடந்தது. இவ்வாறு எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரை மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவை குறித்து ராகுல்காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. இந்துக்கள், பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் குறித்த பேச்சில் சில பகுதிகள் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்