தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி: பிரதமர் மோடி புகழாரம்

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-18 03:32 GMT

டெல்லி,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.

சென்னை கலைவானர் அரங்கில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக நடைபெறும் இந்நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது.

இந்திய அரசியல், இலக்கியம், சமுதாயத்தில் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தார்.

அரசியல் தலைவராக முதல்-அமைச்சராக கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார். மக்களால் முதல்-அமைச்சராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி மக்கள், கொள்கை, அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நாளில் கருணாநிதிக்கு எனது இயதப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்