காரில் பிணமாக கிடந்த சப்-இன்ஸ்பெக்டர்... மர்மம் என்ன? - போலீசார் விசாரணை
கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டர் காரில் பிணமாக கிடந்தார்.;

திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் அருகே உள்ள பட்டித்தானம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 42). இவர் ஏட்டுமானூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கணேஷ்குமார் கண்ணூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
எனவே இவருக்கு வழியனுப்பு விழா நடத்த சக நண்பர்கள், போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து கணேஷ்குமார் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பலமுறை அவரது செல்போனுக்கு அழைத்தும், செல்போனை எடுக்கவில்லை. இதனால் சிலர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் வெளியே நின்ற காரில் கணேஷ்குமார் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஏட்டுமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சப்-இன்ஸ்பெக்டர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.