சாலை தடுப்புச்சுவர் மீது ஜீப் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

சாலை தடுப்புச்சுவர் மீது ஜீப் மோதிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-08-22 08:31 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்ராஜ்கஞ்ச் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பீபிகஞ்ச் பாலத்தில் இன்று அதிகாலை ஒரு ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புச்சுவர் மீது அதிபயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள், 1 குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போஜ்பூர் போலீசார் அறிக்கையில், "இறந்தவர்கள் பூப் நாராயண் பதக் (56), பிபுல் பதக் (26), ரேணு தேவி (55), அர்பிதா பதக் (25) மற்றும் ஹர்ஷ் குமார் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குஷி குமாரி ( 22), மது தேவி (27) மற்றும் பெலி குமாரி (5) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்