வேறொரு பெண்ணுடன் நிச்சயம்... அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: காதலனின் முகத்தை சிதைத்த இளம்பெண்

காதலி எதிர்ப்பு தெரிவித்தபோதும் அவர் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து கொண்டார்.

Update: 2024-06-25 02:36 GMT

புதுடெல்லி,

டெல்லியின் புறநகர் பகுதியான நிகல் விகாரில் வசிப்பவர் ஓம்கார் (வயது 24). கணினியில் வரைகலை வடிமைப்பாளராக பணி செய்து வருகிறார். அவர் சம்பவத்தன்று ரங்கோலா பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், அவரை தாக்கினர். கத்தியால் முகத்தில் பல இடங்களில் கிழித்து காயம் ஏற்படுத்தினர். இதனால் அவரது முகம் சிதைந்தது.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வந்தனர். நேற்று துவாரகா மோர் பகுதியில் சுற்றிய விகாஷ் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரும், மற்ற 2 கூட்டாளிகளும் சேர்ந்து ஓம்காரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒரு பெண் கூறியதால் ஓம்காரை தாக்கியதாகவும் கூறி உள்ளனர். அப்போதுதான், ஓம்காரின் காதல்கதை வெளிச்சத்திற்கு வந்தது. ஓம்கார், தன்னுடன் பணி செய்த 30 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். வயதில் மூத்த பெண் என்றாலும் கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்ததுடன், நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஓம்காருக்கு வேறு ஒரு பெண்ணுடன் சமீபத்தில் நிச்சயம் ஏற்பாடானது. காதலி எதிர்ப்பு தெரிவித்தபோதும் அவர் நிச்சயம் செய்து கொண்டார். இதனால் அவரது காதலி மனம் உடைந்தார். தன்னை கைவிட்ட காதலனை பழி தீர்க்க எண்ணினார்.

அதற்காக 3 குண்டர்களை கூலிக்கு அமர்த்திய அவர், ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து, காதலனின் முகத்தை சிதைக்க கட்டளை கொடுத்துள்ளார். திராவக பாட்டில் ஒன்றையும் அவர்களிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி, ஓம்கார் முகத்தில் திராவகத்தை வீச முடியாததால், அவரை தாக்கி கத்தியால் முகத்தை கிழித்ததாகவும் கூறினார்.

இதையடுத்து, விகாஷ் கொடுத்த தகவலின் பேரில், அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தச் சொன்னபோது, காதலன் தன்னுடன் எடுத்த அந்தரங்க படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும், அதனால் காதலனை பழி தீர்த்ததாகவும் அவர் கூறி உள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்