மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

Update: 2024-10-14 06:25 GMT

File image

புதுடெல்லி,

மும்பையில் இருந்து 239 பயணிகளுடன் ஏஐ 119 எனப்படும் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் நோக்கி இன்று புறப்பட்டது. இந்நிலையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பாதுகாப்புக் காரணங்களுக்காக நடுவானிலிருந்து காலை 4.10 மணியளவில் உடனடியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அங்கு, பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இதற்கிடையில் விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "ஏஐ 119 எனப்படும் மும்பையிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அரசாங்கத்தின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக் குழுவின் வழிகாட்டுதலின்படி டெல்லி விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது. அனைத்து பயணிகளும் டெல்லி விமான நிலையத்தில் இறங்கி பாதுகாப்பாக உள்ளனர். இந்த எதிர்பாராத இடையூறினால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைக்கும் விதமாக எங்கள் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏர் இந்தியா தனது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியுடன் உள்ளது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்