நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கு: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.;

பெங்களூரு,
துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவை கடந்த 3-ந் தேதி டெல்லியை சேர்ந்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கம் கடத்தலில் நடிகையின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைதாகி உள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் விசாரணை அறிக்கையை தயாரித்து பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது நடிகை ரன்யா ராவ் மற்றும் தருண் ராஜு ஆகியோர் அமெரிக்கா பாஸ்போர்ட்டை வைத்து தங்கம் கடத்தியுள்ளனர். தருண் ராஜு மட்டும் 6 கிலோ தங்கம் கடத்தியுள்ளார்.
மேலும் அவர், ரன்யா ராவ் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய்க்கு தங்கம் கடத்தி வந்துள்ளார். அதாவது ரன்யா ராவுக்கு சொந்தமான நகைக்கடை துபாயில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் உள்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று துபாய் நகைக்கடைக்கு தங்கத்தை கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தருண் ராஜுவின் பாஸ்போர்ட்டில் ஜெனீவா செல்வதாக கூறி, துபாயில் இருந்து பெங்களூருவுக்கு நடிகை ரன்யா ராவ் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.