மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை கவுரவிக்கும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதில், "எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை" எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.