புஷ்பா 2-வை தொடர்ந்து மேலும் ஒரு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்?
'ஓர் இரவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சாம் சி.எஸ்.;
சென்னை,
பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ். 'ஓர் இரவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா படத்தில் இசையமைத்ததன் மூலம் தனக்கான இடத்தை பிடித்தார். இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனைத்தொடர்ந்து அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
அதன்படி, சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த புஷ்பா 2 படத்திற்கு பின்னணி இசையமைத்திருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 படத்திற்கு பின்னர், ஜாக் என்ற புதிய தெலுங்கு படத்திற்கும் இவர் இசையமைக்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தை 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்குகிறார். சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாகியாக நடிக்கிறார்.