ஏழு கடல் ஏழு மலை' படத்தின் 2வது பாடல் வெளியானது

ஏழு கடல் ஏழு மலை' படத்தின் 2வது பாடல் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Update: 2024-07-05 16:14 GMT

சென்னை,

பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் சமீபத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் பாரட்டுகளும் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து டிரான்சில்வேனியா திரைப்பட விழாவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டது. ஜனவரி மாதம் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து இணையத்தில் இக்காட்சிகள் பரவலாக பேசப்பட்டன. ராமின் முதல் படமான கற்றது தமிழ் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக கருத்துக்களை பகிர்ந்தனர்.

இதன் பின்னர் இப்படத்தின் முதல் பாடலான 'மறுபடி நீ' என்னும் பாடலை பிப்ரவரி மாதம் படக்குழு வெளியிட்டது. இப்பாடலை பாடலாசிரியர் மதன்கார்க்கி எழுத நடிகர் சித்தார்த் பாடியிருந்தார்.

இந்த நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் 2வது பாடல் 'ஏழேழு மலை' எனும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் யுவன் சங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் பாடுவது இதுவே முதல்முறை. இந்த பாடலுக்கு மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்