'சூர்யா 44' ஆக்சன் கலந்த காதல் படம் - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

‘சூர்யா 44’ படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

Update: 2024-10-18 10:08 GMT

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 49-வது பிறந்தநாளில் 'சூர்யா 44' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கேரளா, சென்னை போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த படமானது கேங்ஸ்டர் படம் இல்லை எனவும் இது ஆக்சன் கலந்த காதல் படம் என்பதையும் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Tags:    

மேலும் செய்திகள்