சத்யராஜ் மகள் திவ்யாவின் 'திராவிட மண்' பதிவால் பரபரப்பு

மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியானதை ஒட்டி, சத்யராஜ் மகள் திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அதில் திராவிட மண் என்றும், வெற்றி நமக்கே என்றும் பதிவிட்டிருந்தார்.

Update: 2024-06-06 13:09 GMT

நடிகர் சத்யராஜின் இரு வாரிசுகளில், மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறார். மற்றொரு வாரிசான திவ்யா சத்யராஜ், தந்தையின் கொள்கைகள் மற்றும் அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்டதில், அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்த வகையில் நடப்பு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை முன்னிட்டு, திவ்யா சத்யராஜ் வெளியிட்டிருக்கும் சமூக ஊடகப்பதிவு, அவர் களமிறங்கப்போகும் அரசியல் முகாம் குறித்த விவாதங்களை கிளப்பி உள்ளது.

 திவ்யா சத்யராஜ் அடிப்படையில் ஒரு ஊட்டச்சத்து நிபுணர்.  தனிப்பட்ட புகைப்படங்கள் மட்டுமன்றி, இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஊட்டச்சத்து தொடர்பான பதிவுகள் வரவேற்பு பெற்றவை. தனது விசிறிகள் எழுப்பும் ஊட்டச்சத்து தொடர்பான கேள்விகளுக்கும் அவ்வப்போது திவ்யா பதிலளிப்பார். அன்றாட உணவுமுறையில் ஊட்டச்சத்துக்கு உலை வைக்கும் துரித உணவுகளின் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வையும் தொடர்ந்து அவர் வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் அவரது சமூக ஊடகப் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. மருந்துப்பொருள் நிறுவனங்களின் மோசடி குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதிலும் திவ்யா கவனிக்கப்பட்டார்.

சத்யராஜின் மகள் திவ்யா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, அரசியலுக்கு வர போகிறார் என்றும், பாஜகவில் இணைய போகிறார் என்றும் தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. சத்யராஜ்  தி.க. கொள்கைகளில் ஆர்வம் கொண்டனர். ஆனால், அவரது மகள் திவ்யா பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்களும், ரசிகர்களும் எழுப்பி வந்தனர். அதற்கு பதில் அளித்த திவ்யா, மக்களவை தேர்தலில் பங்கேற்க பாஜக தன்னை அழைத்தது உண்மை தான் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனிடையே மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி இணைய உலக பிரபலங்கள் பலரும் தங்களது பார்வைகளை பதிவு செய்து வருவதன் மத்தியில் திவ்யா சத்யராஜ் நேற்றிரவு தனது பதிவை வெளியிட்டிருந்தார். அதில் '40/40 இது திராவிட மண். எப்போதும்  வெற்றி நமக்கே' என்று பதிவிட்டிருந்தார். புதுவை மற்றும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் வென்றுள்ளது. தேசத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்த வெற்றிக்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அவற்றின் மத்தியில் திவ்யா சத்யராஜ் தனது பதிவை பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் கடந்த சில வருடங்களாகவே தனக்கு சமூகப்பணி மற்றும் அரசியலில் ஆர்வம் இருப்பதாக தெரிவித்து வருவதும், தனிப்பட்ட வகையில் அரசியல் அல்லது சமூக இயக்கம் தொடங்கி மக்கள் சேவையில் ஈடுபடப்போவதாகவும்' அறிவித்து வந்திருக்கிறார். இவற்றின் மத்தியில் திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் சேரப்போகிறாரா என்று இணையவாசிகள் அவரிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்