சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் ரவிதேஜா!

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ரவிதேஜா புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Update: 2024-10-19 10:59 GMT

சென்னை,

சுந்தர் சி ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர் குடும்ப படமான 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான 'அரண்மனை 4' படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். தற்போது சுந்தர் சி 'கேங்கர்ஸ்' என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் வடிவேலு, கத்ரீன் தெரசா, பக்ஸ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா நடிக்கவுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தினை இயக்கவுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ரவிதேஜா நடிக்கவுள்ள தெலுங்கு படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி. இதுதொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்