நார்வே செஸ் போட்டி: 2-ம் நிலை வீரரை சாய்த்தார் பிரக்ஞானந்தா, பெண்கள் பிரிவில் வைஷாலி ஆதிக்கம்

நார்வே செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 2-ம் நிலை வீரர் அமெரிக்காவின் காருனாவை வீழ்த்தினார்.

Update: 2024-06-02 20:58 GMT

ஸ்டாவன்ஞர்,

12-வது நார்வே சர்வதேச செஸ் தொடர் அங்குள்ள ஸ்டாவன்ஞரில் நடந்து வருகிறது. இதில் 6 வீரர், 6 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10 சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார்.

ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 2-ம் நிலை வீரர் அமெரிக்காவின் பேபியானா காருனாவை சந்தித்தார். கிளாசிக்கல் முறையில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 77-வது காய் நகர்த்தலில் காருனாவை வீழ்த்தி 3 புள்ளிகளை பெற்றார். ஏற்கனவே 'நம்பர் ஒன்' வீரர் கார்ல்செனை (நார்வே) தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மற்றொரு மகிழ்ச்சிகரமான நாளாக இது அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா 'பிடே' தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மற்ற ஆட்டங்களில் கார்ல்சென், பிரான்சின் அலிரெஜாவையும், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா, உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனையும் சாய்த்தனர். 5-வது சுற்று முடிவில் நகமுரா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கார்ல்சென் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 8½ புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் பிரிவின் ஒரு ஆட்டத்தில் இந்திய இளம் புயல் ஆர்.வைஷாலி, சீனாவின் லீ டிங்ஜியை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் சாதுர்யமாக ஆடிய வைஷாலி 39-வது நகர்த்தலில் டிரா கண்டார். இதைத் தொடர்ந்து முடிவை அறிய அர்மாகேட்டன் முறைக்கு ஆட்டம் நகர்ந்தது. இதில் 76-வது நகர்த்தலில் எதிராளிக்கு வைஷாலி 'செக்' வைத்து வெற்றிக்கனியை பறித்தார். அவருக்கு 1½ புள்ளியும், டிங்ஜிக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது. இன்னும் 5 சுற்று எஞ்சியுள்ள நிலையில் பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். உக்ரைனின் அன்னா முசிசுக் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்