கான்பூர் டெஸ்ட்: இந்தியர்களால் தாக்கப்பட்டாரா வங்காளதேச ரசிகர் 'டைகர் ராபி'..? உண்மை நிலவரம் என்ன..?

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-09-27 12:27 GMT

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்வதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அதோடு ரத்து செய்யப்பட்டது.

முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் இடையே வங்காளதேச கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான 'டைகர் ராபி' இந்திய ரசிகர்களால் தாக்கப்பட்டதாகவும், அதனால் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக கான்பூர் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கான்பூர் போலீசார் கூறுகையில், டைகர் ராபி போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது நீரிழப்பு காரணமாக உடல்நிலை மோசமானதாகவும், அதானலயே அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்