பதற்றத்தை தணிக்க நடவடிக்கை- இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

Update: 2024-09-29 11:43 GMT

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவதால், போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

அவ்வகையில், மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றங்களைத் தணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சீனா இன்று அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதற்றத்தை தணிக்கவும், மோதல் தீவிரமடைவதைத் தடுக்கவும் அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

லெபனானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் மீதான தாக்குதலை எதிர்ப்பதாகவும், அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. மேலும் விரோதத்தைத் தூண்டும் மற்றும் பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் அதனை எதிர்ப்பதாக சீனா கூறியிருக்கிறது.

மோதல் தீவிரமடைந்திருப்பதால் சீன மக்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என்று சீன அரசு தனியாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்