பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல்- சவுதி அரேபியா கடும் கண்டனம்

பிரான்ஸ் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்தது.

Update: 2020-10-30 11:01 GMT
ரியாத்,

பிரான்சில் உள்ள  நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் நேற்று பயங்கரவாதி ஒருவன் கையில் கத்தியுடன் நுழைந்தான். அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமுடன் நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்த போலீஸ் படையினர் அங்கு மின்னல் வேகத்தில் விரைந்தனர். அதற்குள் அவனது தாக்குதலில் 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அவன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியபோதும், போலீசாரால் கைது செய்யப்பட்டபோதும் மத ரீதியிலான கோஷம் போட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த பயங்கரவாதி, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், சவுதி அரேபியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “  நைஸ் நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்