"இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள்" - ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து ஜோ பைடன்

ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டது இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-18 02:46 GMT

வாஷிங்டன்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் காசா பகுதியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காசாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான, ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்கி அழித்துள்ளது. ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டது இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல், 2-ம் உலகப்போரின்போது நடந்த யூத படுகொலைக்கு பிறகு நடைபெற்ற மிகவும் மோசமான தாக்குதலாகும். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், 7 அமெரிக்கர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும், இதற்கு பிறகான பல்வேறு தாக்குதல்களுக்கும் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் மூளையாக செயல்பட்டுள்ளார்.

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, யாஹியா சின்வரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் சிறப்பு படைப் பிரிவினருக்கு உத்தரவிட்டேன். அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் பாதுகாப்பு படை காசாவில் மறைந்திருந்த ஹமாஸ் தலைவர்களை தேடி அழித்தது.

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை டி.என்.ஏ. பரிசோதனை உறுதி செய்துள்ளது. இது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு ஒரு நல்ல நாளாகும்.

கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் ஒசாமா பின்லேடன் தேடி அழிக்கப்பட்டபோது ஏற்பட்ட அதே மாதிரியான சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மக்களுக்கு இது ஆறுதலை ஏற்படுத்தும் நாளாகும். இனி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு அரசியல் ரீதியாக நல்ல எதிர்காலம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நமக்கு முன்னாள் இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன."

இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்