பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 6.3 ரிக்டர் அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-04-26 00:28 GMT
போர்ட் மோரெஸ்பி, 

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பங்குனா நகரில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

மேலும் செய்திகள்