ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதி கைது

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Update: 2020-01-19 04:29 GMT
மொசூல்,

ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  எனினும் இந்த தாக்குதலில் பொதுமக்களில் பலர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்தும் உள்ளனர்.

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.  ஏறக்குறைய 250 கிலோ (560 பவுண்டுகள்) உடல் எடை கொண்ட அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியும் வந்துள்ளார்.

அவரை ஈராக்கிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் வைத்து கைது செய்தது.  ஆனால் கைது செய்யப்பட்ட முப்தியை காரில் ஏற்ற முடியவில்லை.  அதிக உடல் எடையுடன் குண்டாக இருந்த முப்தியை காருக்குள் ஏற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில், லாரி ஒன்றில் அவரை ஏற்றி கொண்டு சென்றனர்.

ஐ.எஸ். அமைப்பினருக்கு விசுவாசமுடன் செயல்படாத இஸ்லாமிய மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் (பத்வா) முப்தி பிறப்பித்து உள்ளார் என ஈராக்கிய போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்