துருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 7 பேர் பலி

துருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Update: 2019-12-26 08:15 GMT
அங்காரா,

சொந்த நாட்டில் அடக்குமுறை, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து துருக்கி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக பலர் செல்கின்றனர். கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இவர்கள் சில சமயங்களில் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் துருக்கிக்கு அகதிகளாக 71 பேரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் மூலம் 64 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். 

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து துருக்கிக்கு அகதிகளாக வந்தவர்கள் என்று துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்