அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

சென்னை, போர் நினைவுச்சின்னம் அருகே அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-18 04:41 GMT

சென்னை,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர்.

இதனைத்தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்து வரும்நிலையில், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ராணுவத்தில் சேரத் தயாராகும் பயிற்சி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவத்தில் சேருவதற்காக விண்ணப்பித்திருக்கும் ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடர்பான தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நடத்தி வரும் திடீர் போராட்டத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்