சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற வாலிபர் கைது

ஒடுகத்தூர் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற வாலிபர்கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-20 17:13 GMT

சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி

ஒடுகத்தூரை அடுத்த ஏரியூர் குறவன் கொட்டாய் அருகே உள்ள அரசம்பட்டு காப்புக்காட்டு பகுதியில் நேற்று மாலை வனச்சரக அலுவலர் இந்து தலைமையில் வனவர்கள் பிரசன்ன குமார், சுதா, வனக்காப்பாளர்கள் மணிவாசுகி, பார்த்திபன், ஜெகநாதன், வன காவலர் ஜெயபால் ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டும் சத்தம் கேட்டுள்ளது. அந்தப்பகுதிக்கு வனத்துறையினர் சென்றனர். அங்கு 3 பேர் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் விரட்டி சென்றனு மடக்கியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

வாலிபர் கைது

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் குனுங்கனூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 35) என்பதும், சந்தன மரங்களை வெட்டி தொங்கு மலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வேறு இடத்திற்கு கடத்திச் செல்ல திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. இதனையடுத்து சங்கரை கைது செய்த வனத்துறையினர் வெட்டப்பட்ட 8 சந்தன கட்டைகள், மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய வாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தப்பி ஓடிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், தொங்குமலை பகுதியைச் சேர்ந்த சேகர் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்