கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது

Update: 2022-11-30 18:45 GMT

கள்ளக்குறிச்சி

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராம உதவியாளர் பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தாலுகாக்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழி மூலம் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டவர்களுக்கும் எழுத்து தேர்வு வருகிற 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு நீலமங்கலம் ஏ.கே.டி. சி.பி.எஸ்.இ.பள்ளி, சங்கராபுரம் தாலுகா-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கராபுரம், சின்னசேலம் தாலுகா- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னசேலம், கல்வராயன்மலை தாலுகா-ஏகலைவா அரசு ஆண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர் தாலுகா- திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை தாலுகா- பெஸ்கி மேல்நிலை பள்ளி உளுந்தூர்பேட்டை ஆகிய 6 இடங்களில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

நுழைவு சீட்டு

இதற்கான நுழைவு சீட்டு விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இக்குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய தெரியாதவர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கான நுழைவுச்சீட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்