குடிநீர் வினியோகம் செய்யக்கோரிகாலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகைவிருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிகுடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-20 18:45 GMT

விருத்தாசலம், 

குடிநீர் குழாய் உடைப்பு

விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் ஊராட்சிக்குட்ட படுகளாநத்தம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைந்து சேதமானதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேதமடைந்த குழாயை சீரமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தியதோடு, குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பெண்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்