கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை; தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

Update: 2023-06-19 18:45 GMT

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் 100 டிகிரியில் இருந்த வெப்பம் படிப்படியாக குறைந்து விட்டது. வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழையும் பெய்தது.

இந்நிலையில் வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவிலும் நீடித்தது. விட்டு, விட்டு நேற்று காலை வரை பெய்தது.

இருப்பினும் இந்த மழையால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வேலை நிமித்தமாக சென்றவர்கள் குடைபிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் சென்றதை பார்க்க முடிந்தது. காலை 10 மணிக்கு பிறகு மழை இல்லை. வானம் மேக மூட்டமாக இருந்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை அளவு

இது தவிர புவனகிரி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 31.5 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கடலூர்- 28.3

புவனகிரி- 28

அண்ணாமலைநகர்- 24.8

கொத்தவாச்சேரி- 23

சிதம்பரம்- 22.5

வானமாதேவி- 18.2

பண்ருட்டி- 18

வேப்பூர்- 17

பரங்கிப்பேட்டை- 16.8

குறிஞ்சிப்பாடி- 16

லால்பேட்டை- 15

காட்டுமயிலூர்- 15

வடக்குத்து- 14

சேத்தியாத்தோப்பு- 14

Tags:    

மேலும் செய்திகள்