"விழுந்து எழுந்தாள் அம்மன்" என்ற பெயருக்கு ஏற்ப பக்தர்கள் செய்த காரியம்..!

திருவாரூர் அருகே 20 அடி உயர கோவில் தேரை சாய்த்து தூக்கிச்செல்லும் வினோத திருவிழா நடந்தது.

Update: 2022-08-19 05:10 GMT

திருவாரூர்,

திருவாரூரை அடுத்த தப்பளாம்புலியூர் கிராமத்தில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆவணி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

சக்கரம் இல்லாத சுமார் 20 அடி உயரம் உள்ள இந்த தேரை 2 வாரைகள் என பெரிய பல்லக்கு கம்புகள் மீது கட்டி பக்தர்கள் தோளிலும், தலையிலும் தூக்கிக்கொண்டு இடமும், வலமுமாக அசைத்தபடி வீதி, வீதியாக கொண்டு செல்வர். ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் பக்கவாட்டில் தேர் சாய்ந்து விடும்.

அப்போது தேரில் உள்ள அம்மனும், பூசாரியும் சாய்ந்து விழுவதும், பின்னர் பூசாரி எழுந்து அம்மனை நேராக வைத்தவுடன் மீண்டும் பக்தர்கள் தூக்கி செல்வதும் இந்த தேரோட்டத்தின் சிறப்பு ஆகும். இவ்வாறு சாய்ந்து, மீண்டும் எழுந்து செல்வதால் இவ்வூர் அம்மன், விழுந்து எழுந்தாளம்மன் என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் குளுந்தாளம்மன் என பெயர் பெற்றது.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது. வாரைகளின் மீது 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட தேரை பக்தர்கள் தோளில் தூக்கிக்கொண்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் தேர் நிலையை அடைந்தது. இந்த வினோத தேர் திருவிழாவில் தப்பளாம்புலியூர், காரியாங்குடி, பல்லாவரம், வாஞ்சூர், இலங்கைசேரி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்