"நடந்தது தேர்தல் அல்ல.. தி.மு.க. எடுத்த ஏலம்.. " - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிபெற்றார்.

Update: 2024-07-13 12:06 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம்தேதி நடைபெற்றது.

மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும். ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் இறுதியாக வெளியாகி உள்ள முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளார் 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது.

இதன்படி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அன்புமணி, 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். 

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, "நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று தி.மு.க. வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்கு பெற்றுள்ளோம். காணை பகுதியில் தி.மு.க இளைய வாக்காளர்களுக்கு கஞ்சா பட்டுவாடா செய்தனர். இது தேர்தலே இல்லை. தி.மு.க.வினர் எடுத்த ஏலம். வருங்காலங்களில் இடைத்தேர்தலை ஏலம் எடுத்துவிடுங்கள். அதனால்தான் அ.தி.மு.க. பின்வாங்கியது. இது பணநாயகத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் மரணம்" என்று அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்