திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் திருக்கல்யாணம்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-04-02 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பங்குனி திருவிழா

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் போன்ற சமய புலவர்களால் பாடல் பெற்ற சிறப்புமிக்க தலமாகும். மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள் பாலித்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கண்ணூஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

திருக்கல்யாணம்

அதன் பின் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்திற்கு சுவாமியும்-அம்பாளும் எழுந்தருளினர். பிறகு அழகிய மணவாள ரெங்கநாத பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தனது குடும்பத்தினருடன் வந்து திருக்கல்யாணம் நடைபெறும் மேடையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்து சுவாமி தரிசனம் செய்தார். பின்பு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.

பிறகு சுவாமி, அம்பாள், அழகிய மணவாள ரெங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட புதிய மஞ்சள் கயிற்றை பெண்கள் அணிந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கோவில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்