சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன் முதலாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து...!

சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மாதாந்திர மன்றக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-28 11:01 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க, ஒவ்வொரு மாதமும் மாமன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி நடந்த மான்றக் கூட்டத்தின் போது, ம.தி.மு.க. உறுப்பினர் ஜீவன், மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கூட்டத்திலேயே கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேயர் பிரியா ராஜன், 'இனி நடைபெறும் மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்' என அறிவித்தார். 100 ஆண்டுகள் கண்ட வரலாற்று சிறப்பு மிக்க சென்னை மாமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது இதுவே முதல் முறை.

அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான மாமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. வழக்கமாக சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் திருக்குறளுடன் தொடங்கும் நிலையில், முதன் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.

இன்றைய கூட்டத்தில் கடந்த 16-ம் தேதி மறைந்த 122வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபட்டது. மாமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து பேசினர். தொடர்ந்து துணை மேயர் மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் பதவி காலத்தில் இருக்கும் போது உயிரிழந்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்பதை மாற்றி சிறப்பு தீர்மானமாக ரூ.5 லட்சமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். துணை மேயர் வைத்த கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் மார்ச்-2ந்தேதிக்கு மாமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவித்து மேயர் பிரியா ராஜன் கூட்டத்தை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் ஒலித்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்