பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கிய தனியார் நிறுவனம்

பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டை தனியார் நிறுவனம் வழங்கியது.

Update: 2023-01-30 19:59 GMT

தாமரைக்குளம்:

அரியலூரில் வசித்து வருபவர் கிரியின் மனைவி கற்பக வள்ளி(வயது 55). இவர் கடந்த 2021-ம் ஆண்டில் சொந்த வீடு கட்டினார். அப்போது வீட்டிற்கு பொருத்துவதற்காக பிரின்ஸ் - பிட்டிங் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த தண்ணீர் குழாய்களையும், அதற்கு தேவைப்படும் இதர பொருட்களையும் ரூ.47 ஆயிரம் செலுத்தி, பெரம்பலூர் மாவட்டம் நொச்சிகுளத்தில் உள்ள தாய் டிரேடர்ஸ் என்ற கடையில் வாங்கியுள்ளார்.

வீட்டில் தண்ணீர் குழாய்களை பொருத்திய 3 மாதங்களில் குழாய்களில் நீர்க்கசிவு, குழாய் அடைப்பு, பாசி பிடித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து குழாய்களை விற்பனை செய்தவரிடம் கற்பகவள்ளி புகார் தெரிவித்துள்ளார். இதனை உற்பத்தியாளருக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் உற்பத்தியாளரும், விற்பனையாளரும் அந்த பிரச்சினையை சரி செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தரமற்ற பொருட்களை விற்பனை செய்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதியன்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கற்பகவள்ளி, தனது கணவர் கிரி மூலம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து கடந்த 12-ந் தேதி முதல் விசாரணை நடத்தப்பட்டது. இப்பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தராக வக்கீல் இளவரசனை, குறைதீர் ஆணையம் நியமித்தது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமரச அறிக்கை கடந்த 24-ந் தேதி ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்றே குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீட்டுத் தொகையாக வரைவோலை மூலம் வழங்கினர். நேற்று சமரச அறிக்கையின்படி தீர்ப்பு வழங்கிய அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனம் விற்பனை செய்த குழாய்களையும், இதர பொருட்களையும் எடுத்துக்கொண்டு வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஒரு வார காலத்திற்குள் தரமான குழாய்களையும், இதர பொருட்களையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 6 வார காலத்தில் முதலாவது விசாரணை ஏற்பட்டு, 12 நாட்களில் இழப்பீடு பெற்று தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்