தொடரும் நாய்கடி சம்பவம்... தண்டையார்பேட்டையில் பள்ளி மாணவனை கடித்து குதறிய தெரு நாய்

சென்னை தண்டையார்பேட்டையில் 8 வயது பள்ளி மாணவனை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-07-07 23:35 GMT

கோப்புப்படம் 

தண்டையார்பேட்டை,

சென்னையில் நாய்கடி சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வீடுகளில் நாய் வளர்க்க உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் பள்ளி மாணவனை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் சேணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி. சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கவுரிநாத் (வயது 8). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் கவுரிநாத், தனது நண்பனுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று திடீரென மாணவன் கவுரிநாத் மீது பாய்ந்து, கடித்து குதறியது. இதில் அவனுக்கு இடது கை தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்த மாணவனை, அவனது தாயார் தனலட்சுமி அதே பகுதியில் உள்ள சின்ன ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் அங்கு நாய் கடிக்கு மருந்து இல்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவன் கவுரிநாத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்