சோழவந்தான் அருகே கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றியவர் விபரீதமாக உயிரிழப்பு -கரை ஏறிய போது கல் விழுந்ததால் பரிதாபம்

சோழவந்தான் அருகே கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றியவர் விபரீதமாக உயிரிழந்தார்

Update: 2023-03-29 22:06 GMT

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி வீரம்மாள். நேற்று மாலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வீரம்மாள் வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் குதித்து விட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான சிவலிங்கம்(வயது 41) மற்றும் 4 பேர் சேர்ந்து கிணற்றில் குதித்து கயிறு மூலம் வீரம்மாளை மீட்டு காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் கிணற்றிலிருந்து கயிறை பிடித்து, சிவலிங்கத்தை தவிர மற்றவர்கள் மேலே ஏறிவிட்டனர். சிவலிங்கம் கயிறை பிடித்து மேலே ஏறியபோது எதிர்பாராதவிதமாக கிணற்றின் மேலே இருந்த பெரிய கல் ஒன்று சிவலிங்கம் தலையில் விழுந்தது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிணற்றில் விழுந்தார்.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மேலே கொண்டு வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற சென்ற இடத்தில் ெதாழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த சிவலிஙகத்துக்கு நாகபாண்டி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்