தஞ்சை: பல ஆண்டுகளாக போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்த அரிவாள் திருடன் கைது

பல ஆண்டுகளாக தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 70 வயது அரிவாள் திருடனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-29 05:10 GMT

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி தாலி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பறித்து வந்துள்ளார்.

மேலும் இருசக்கர வாகனங்களை திருடி செல்வதும், பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளை அடித்துச் செல்வதும், நடந்து வந்தது. இதனால் பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் பயம் இருந்து வந்தது. இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் யார் ஈடுபடுகிறார்கள் என தெரியாமல் போலீசாரும் குழம்பி வந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் தெரியாத நபரை உடனடியாக பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து, சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை கண்டுபிடித்தனர். இதில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்கிற பழனியாண்டி (வயது 70) என்பது தெரியவந்தது.

கடந்த 2 மாதமாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் நேற்று ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே பழனியாண்டி நிற்பதை அறிந்த தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 35 வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் வழிப்பறி செய்து 5 வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றது தெரிய வந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு பகுதிகளில் பல வருடங்களாக திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரே இரவில் 4 வீடுகளில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தாலி செயினை அறுத்து சென்ற குற்றத்திலும் இவர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. போலீசார் இவரிடம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்