தமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை - அர்ஜுன் சம்பத் பேட்டி

தமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்று அர்ஜுன் சம்பத் பேட்டியில் கூறினார்.

Update: 2023-06-23 08:59 GMT

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சீபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். முன்னதாக காஞ்சீபுரம் காந்திரோட்டில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு 500 கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் கிடையாது. மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மக்களை மது பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

கஞ்சா, போதைபொருள் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதனை தடுப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விஷ சாராய சாவுகள் நடந்த உடனே ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான சாராய ஊறல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. அது போல தினசரி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து கோவில்களை மூடும் நடவடிக்கை மேற்கொள்வதை கண்டிக்கிறோம்.

இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மது அடிமைகள் மறுவாழ்வு முகாம் மற்றும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மக்களை விடுவிப்பதற்கான மருத்துவ ஆலோசனைகள் பயிற்சி வகுப்புகள் ஆகியவை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் முத்து மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்