சிங்காரப்பேட்டை, சூளகிரியில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தற்கொலை

Update: 2023-06-19 19:45 GMT

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை, சூளகிரியில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளி

சிங்காரப்பேட்டை அருகே வெள்ளகுட்டையை சேர்ந்தவர் மணி (வயது35). மாற்றுத்திறனாளி. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூளகிரி

ஓசூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள நேரு நகர் பகுதியில் வசித்து வந்தவர் விக்னேஷ் (28). இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக செல்லுமாறு அவரது சகோதரர் கூறியதாக தெரிகிறது. இதற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த விக்னேஷ் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்