போதையால் பாதை மாறும் மாணவர்கள்

குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்டன. இப்போது அது ஒரு கவுரவமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

Update: 2022-12-07 20:14 GMT

விதிகளால் என்ன பயன்?

கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ- மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

போதைப்பொருட்கள்

'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோத செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

அரசு சட்டக்கல்லூரி முதலாமாண்டு மாணவர் இன்பஸ்ரீராம் சங்கர்:- இளைஞர்கள் இந்திய நாட்டின் எதிர்காலம் என்று சுவாமி விவேகானந்தர் முதல் அப்துல்கலாம் வரை கூறியுள்ளார்கள். வீட்டுக்கும், நாட்டுக்கும் தூண்களாக விளங்கும் இளைஞர்கள் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. பள்ளி, கல்லூரி அருகே போதை வஸ்துகள் சரளமாக புழங்குகிறது. இதனை கல்லூரி மாணவர்கள் அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள். எனவே போதை வஸ்துகள் பற்றி கல்லூரி மாணவர்களிடைேய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதனால் ஏற்படும் தீங்குகளை கல்லூரி பேராசிரியர்களை கொண்டு பாடத்தில் ஒரு பகுதியாக சிறப்பு வகுப்புகளாக நடத்த வேண்டும். அதன் வாயிலாக மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

கடும் நடவடிக்கை

மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பூங்கோதை:- போதைப்பழக்கத்திற்கு ஆளான கல்லூரி மாணவர்கள் சிலர் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கஞ்சாவை வாங்கி தொடர்ந்து அந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். 16 வயதிலிருந்து 36 வயது வரை உள்ளவர்கள் தான் கஞ்சா போதைக்கு அடிமை ஆகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. மது, கஞ்சா போன்ற பழக்கத்திற்கு அடிமையான சிலர் பணத்திற்காக கொலை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி கொள்கின்றனர்.

பள்ளி, கல்லூரி முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவர்கள் வீட்டிற்கு வருகின்றனரா? என்று அவர்களது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகள் டாக்டராக, என்ஜினீயராக, சிறந்த விஞ்ஞானிகளாக வரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். ஆனால், தங்கள் பிள்ளைகள் சமுதாயம் மதிக்கக்கூடிய அளவிற்கு ஒரு மனிதனாக வரவேண்டும் என்று நினைப்பதில்லை. கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சுற்றித்திரியும் தேவையற்ற நபர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும். மேலும், போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிரடி சோதனை

கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி:- தற்போது பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ேமலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகிறோம். மருந்து கடையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை, ஊசி சுலபமாக கிடைக்கிறது. இதனை கண்காணித்து அந்த மருந்துக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பள்ளி, கல்லூரிக்கு சென்று மாணவர்களிடையே போதை பழக்கத்தை பற்றியும் அதன் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதில் ஆசிரியர்கள் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் மாணவர்களிடையே நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தவிர்க்க முடியும்.

வீடியோ கேம், சினிமா...

திருச்சி மனநல டாக்டர் ராஜாராம்:- 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் முன்பு போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று கொள்வார்கள். அதில் பெரும்பாலும் மது பழக்கம், சிகரெட் பழக்கத்தில் உள்ளவர்கள் தான் அடிமையாகி சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அப்படி இல்லை. தற்போது 14 வயது சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கஞ்சா, புகையிலை பொருட்கள், திரவம் நுகர்தல் போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். இந்த பழக்கத்தை வீடியோ கேம் மற்றும் தற்போது வெளிவருகின்ற சினிமாவை பார்த்து அதில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். மேலும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனிப்பது குறைந்து வருகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள், விடுமுறை நாட்களில் எங்கு செல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு தங்கள் பிள்ளைகளை டாக்டர், என்ஜினீயர் போன்ற படிப்பு கைள கட்டாயப்படுத்தி படிக்க சொல்கிறார்கள். இதனால் மாணவர்கள் மனமுடைந்து தவறான முடிவு எடுக்கின்றனர். சிலர் இந்த போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். பெற்றோர்கள் மாதம் ஒரு முறை தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்று வரவேண்டும் அப்போது தான் அவர்கள் மனதில் என்ன உள்ளது என்பது தெரியவரும்.

மனரீதியாக ஆலோசனை

திருச்சி காஜாமலை மனநலக்காப்பக நிர்வாகி அபுல் கலாம்:- மனநல காப்பகத்தில் தற்போது 18 வயது முதல் 60 வயது வரை உள்ள போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு 15 நாட்கள் முதல் 31 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாரத்துக்கு ஒரு முறை மனநல மருத்துவர் வரவழைத்து பரிசோதனை செய்வார்கள். அவர்களுக்கு மன ரீதியாக ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மேலும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு திருச்சி மட்டுமின்றி கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று 80 சதவீதம் முதல் 90 சதவீதம் குணமடைந்து செல்கின்றனர். அவர்கள் சென்ற பிறகு தொடர்ந்து 3 மாதம் கண்காணித்து வருகிறோம்.

மதுபானம் எப்படிக் கிடைக்கிறது?

தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன்:-

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்கள் நல்லப் பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்