விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மறியல்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-13 18:35 GMT

புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர் பகுதிக்கு பகுதி நேர அங்காடி, பஸ் வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் சலோமி, துணை செயலாளர் பெருமாள் ஆகியோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபாலன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பரமசிவம் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு விரைவாக பகுதிநேர அங்காடி திறப்பது, வருகிற 17-ந்தேதி முதல் செம்பாட்டூர் வழியாக தண்ணீர் பந்தல்பட்டி கிராமத்திற்கு காலையும், மாலையும் அரசு நகர பஸ் இயக்குவது, செம்பாட்டூர் சிவன்கோவில் அருகில் உள்ள பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டிக்குப் பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பது, குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்