முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

Update: 2022-12-26 19:55 GMT

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அடுத்தமாதம் (ஜனவரி) நடக்கிறது என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு போட்டிகள்

2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அடுத்தமாதம் (ஜனவரி) நடக்கிறது. பொதுப்பிரிவில் (15 முதல் 35 வயது வரை) கபடி மற்றும் சிலம்பப்போட்டியில் கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வாள் வீச்சு, மான்கொம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, தடகளம், நீளம் தாண்டுதல், இறகுபந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

பள்ளி மாணவர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) மாவட்ட அளவிலான போட்டியில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

கடற்கரை கைப்பந்து

பள்ளி மாணவர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) மண்டல அளவிலான போட்டியில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான (17 முதல் 25 வயது வரை) மாவட்ட அளவிலான போட்டியில் கபடி, சிலம்பம் பிரிவில் கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வாள்வீச்சு, மான்கொம்புவீச்சு, இரட்டைகம்பு வீச்சு, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

கல்லூரி மாணவர்களுக்கான (17 முதல் 25 வயது வரை) மண்டலஅளவிலான போட்டியில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு (வயது வரம்பு இல்லை) ஓட்டம், கைப்பந்து, பந்து எரிதல், பேட்மிட்டன், கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கைப்பந்து, செஸ் போட்டி நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு முதல்பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.1,000-மும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பதிவு செய்யாதவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இந்த போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டில் ஆர்வமுள்ள மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் அதிகஅளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்களின் விளையாட்டு திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்