சமூக சீர்திருத்தவாதிகளை கவர்னர் கொச்சைப்படுத்துகிறார் - தர்மபுரியில் ராமகிருஷ்ணன் பேச்சு

Update: 2023-06-27 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குமார், நிர்வாகிகள் இளம்பரிதி, அர்ஜுனன், சிசுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்.

இந்த கூட்டத்தில் ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

கவர்னர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். வடலூர் வள்ளலார் சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்த்த சமூக சீர்திருத்தவாதி. அவர் சனாதன முறையை கடுமையாக எதிர்த்தார். ஆனால் அண்மையில் கவர்னர் ரவி பேசிய போது வள்ளலார் சனாதனத்தை உயர்த்தி பிடித்தார் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வள்ளலார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், அய்யா வைகுண்டர் தொடங்கி தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவானந்தம் என பலர் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுத்துள்ளனர். திராவிட இயக்கம் சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை நிலைநாட்ட பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் பேசி வருகிறார். சமூக சீர்திருத்தவாதிகளை கொச்சைப்படுத்துவதில் கவர்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜென்டாக செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்