முருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-05-29 16:55 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியசாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் விபூதி அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் உள்ள முருகன், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகன், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வைகாசி மாத கார்த்திகையையொட்டி சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிங்காரவேலர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்