ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடு

ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-08-15 21:21 GMT

கன்னியாகுமரி:

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று (புதன்கிழமை) பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆடி அமாவாசை

முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு கடந்த மாதம் 17-ந்தேதி ஆடி முதல் அமாவாசையும், இன்று (புதன்கிழமை) 2-வது ஆடி அமாவாசையும் ஆகும்.

ஆடி அமாவாசையையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்து கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

புனித நீராட ஏற்பாடு

இதையொட்டி இன்று பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக சங்கிலித்துறை கடற்கரையில் படிக்கட்டில் உள்ள பாசிகளை ரசாயனக் கலவை கொண்டு சுத்தம் செய்யும் பணியினை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஊழியர்கள் மேற்கொண்டனர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் அமரும் இடமும் சுத்தம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

--

Tags:    

மேலும் செய்திகள்