அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-22 03:26 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து திமுக வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் கூடுதலாக சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கனவே அரசு தரப்பில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அம்மனு மீதான விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்