சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை

மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Update: 2024-09-25 14:56 GMT

சென்னை,

பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் கஞ்சா வைத்திருந்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து கைதின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதியப்பட்டது.சவுக்கு சங்கர் மீது 2-வது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலம் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. விசாரணையில், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து, வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது. வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இல்லையென்றால் அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

முன்பு இருந்தது போல் தொடர்ந்து செயல்பட்டு மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்வேன். சில காலங்களுக்குப் பிறகு சவுக்கு மீடியா மீண்டும் இயங்கத் தொடங்கும். கோவை சிறையில் எனது கை உடைக்கப்பட்டது. மற்ற சிறைகளில் என்னை வழக்கமான கைதி போலவே நடத்தினார்கள். என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்