கரும்பு கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்

பொங்கல் பொருட்களுடன் வழங்க விவசாயிகளிடம் தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2022-12-23 18:45 GMT

மேலூர், 

பொங்கல் பொருட்களுடன் வழங்க விவசாயிகளிடம் தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பொங்கல் பொருட்கள்

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிக்காதது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில், திருச்சி நான்கு வழி சாலை பகுதியில் நேற்று, கரும்புகளுடன் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்ேபாது, தமிழக அரசு கரும்புகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து பொங்கல் பொருட்களுடன் வழங்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

மேலும், பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்களுடன் வழங்க கரும்பு கொள்முதல் செய்யாவிட்டால் மேலூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது என கோஷமிட்டனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்