திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

Update: 2022-05-28 18:07 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

வளர்ச்சிப்பணிகள்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தபடும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

அவர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12.44 கோடி மதிப்பில் 813 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளில் வருகிற ஜூன் 15-ந்தேதிக்குள் 500 பண்ணை குட்டைகளை அமைக்கப்பட வேண்டும். மேலும் 100 வேலை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 332 பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் தங்குத் தடையின்றி நடக்க வேண்டும். இருளர் இன மக்களுக்கும், நரிகுறவர் இன மக்களுக்கும் தேவையான குடிநீர் வசதிகள், நீர்த்தேக்கத் தொட்டி, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் வழங்கப்பட வேண்டும்.

விரைந்து முடிக்க வேண்டும்

மேலும் நிலுவையில் உள்ள 2,473 தனிநபர் கழிப்பறைகள், 7,575 வீடுகள் ஆகிய கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் திட்டமிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, உதவி இயக்குனர் (தணிக்கை) பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலர் செல்வன், உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

3 காலம்.

Tags:    

மேலும் செய்திகள்