தொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-10 19:25 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழகுடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 58). இவருக்கு செந்தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும், மஞ்சு என்ற மகளும் உள்ளனர். செந்தமிழ்ச்செல்வன் கடந்த 2015-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்று, அங்கு கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செல்போனில் தனது குடும்பத்தினருடன் பேசியபோது, தனக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் சொந்த ஊருக்கு வந்து சிகிச்சை பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இறந்துவிட்டதாக, சவுதி அரேபியாவில் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், அந்த நிறுவனத்தினர் மற்றும் அவருடன் வேலை பார்த்தவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் செந்தமிழ்ச்செல்வனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைத்துள்ளனர். எனவே செந்தமிழ்ச்செல்வனின் உடலை சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்