சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-10 18:52 GMT

சமரச நாள்

தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில் நேற்று சமரச நாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் ஐந்துரோடு பகுதியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலமானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி அண்ணா வளைவு, நால்ரோடு, ஜவகர்பஜார், மாரியம்மன் கோவில் மற்றும் அரச மரத்து ரோடு வழியாக வந்து மீண்டும் பழைய நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதுதவிர ஆட்டோ மூலமாக சமரச மையத்தின் பணிகள் மற்றும் சமரசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

ஊர்வலத்தில் கரூர் மகிளா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி நசீமா பானு, தலைமை குற்றவியல் நடுவர் ராஜலிங்கம், முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, மாவட்ட சமரச மைய செயலாளர் பாக்கியம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திர வர்மா, கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி உமா மகேஸ்வரி, நீதித்துறை நடுவர் எண் 1 அம்பிகா, விரைவு நீதிமன்றம் நீதித்துறை நடுவர் நித்தியா மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 13-ந்தேதி வரை கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்