ராமஜெயம் கொலை வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல்

ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-21 11:52 GMT

சென்னை,

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அவர்கள் பல்வேறு இடங்களிலும், பல்வேறு நபர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்தனர்.

இதற்கு அனுமதி கேட்டு திருச்சி ஜே.எம்.-6 கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர். அப்போது 13 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அதில் தென்கோவன் என்ற சண்முகம் தவிர மற்ற 12 பேரும் தங்களிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ அறிக்கையை இன்று (திங்கட்கிழமை ) கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டு சிவகுமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கை சீலிடப்படப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சார்வில் இந்த அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்